எழுத்தின் அளவு: அ+ அ- அ
தற்கொலைக்கு முயன்ற பிரபல திரையிசை பின்னணி பாடகி கல்பனாவிற்கு சுயநினைவு திரும்பியதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியவர் கல்பனா. அவர் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் வசித்து வருகிறார். இதனிடையே, கேரளாவில் உள்ள தனது மகளை ஐதராபாத்திற்கு வரும்படி கல்பனா அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடலின் போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனைக்கு ஆளான கல்பனா மன அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் சுயநினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் அவரது வீட்டுக் கதவை தட்டி பார்த்த போது, எந்தவித பதிலும் வராததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்த கல்பனாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அபாய நிலையில் இருந்த கல்பனாவிற்கு மருத்துவர்கள் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு சுய நினைவு திரும்பியுள்ளதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.