எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமைகம் மற்றும் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் தலைமையகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாஸ்மாக் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநில செயலாளர் ஆனந்த பிரியா, உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, காவல்துறையினர் கைது செய்த போது காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காவல்துறை வாகனத்தை நாய் வண்டி எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி, தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற பாஜக தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நிலவியதால் பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, கானாத்தூர் இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதியில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அண்ணாமலையை கைது செய்து நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அப்போது பேட்டி அளித்த அண்ணாமலை, டாஸ்மாக் ஊழலை கண்டித்து முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட உள்ளதாக ஆவேசமாக கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புறப்பட்டார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியதால், அங்கு வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அழியா விருந்தினராக காவல் துறையினர் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக கூறினார். மேலும் ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும், மாநில அரசின் எத்தகைய அடக்குமுறைக்கும் அடங்கமாட்டோம் என தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழலை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரைவயில் இருந்து வெளியே வந்த, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை, திருவல்லிகேணி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசனை கைது செய்த போலீசார், ராயப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.