தூத்துக்குடியில் தனியார் உர தொழிற்சாலை முன்பு 2-வது நாளாக தொடரும் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் தனியார் உர தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியம் வாயு கசிவால் ஒப்பந்த தொழிலாளர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் தனியார் உரத்தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அமோனியா பைப்லைனில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணியில் ஹரிஹரன், தன்ராஜ், மாரிமுத்து விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அம்மோனியா வாயு அதிகளவு கசிந்ததால், ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதுதொடர்பாக, முத்தையாபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமோனியம் வாயு கசிவால் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் ஹரிகரன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், தூத்துக்குடி காவல்நிலையம் முன்பு 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹரிஹரனின் குடும்பத்தினருடன், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில், உடன்பாடு எட்டாததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தொந்தரவு செய்தால், மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், எவ்வித பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, வாயு கசிவு ஏற்பட்ட தனியார் உர தொழிற்சாலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலை வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


varient
Night
Day