எழுத்தின் அளவு: அ+ அ- அ
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவருடைய கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மு.க. அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அவரை விடுவித்து கடந்த 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரி மு.க. அழகிரியும் மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், நில அபகரிப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்டார். மேலும் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அழகிரியை விடுவித்து மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம், வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.