எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும், பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் கூறி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதன் மூலம் புலப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அண்ணாமலை, இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை எனவும் சாடினார். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.