புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு எதிரொலி - தென்காசி எஸ்பி அலுவலகத்தை திறக்க ஏற்பாடு தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் செயல்படுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் தென்காசி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாதது குறித்து பேசினார்.  அப்போது, கட்டப்பட்ட அலுவலகங்கள் திறக்கப்படாததால் தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் புரட்சித்தாய்சின்னம்மா குற்றம்சாட்டியிருந்தார்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்டு பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தூய்மை செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், அலுவலகம் திறப்பு குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுரை வழங்கினார். 

இதனிடையே, விரைவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் தொடர்பான வழக்கு நிறைவடைந்த பின், ஆட்சியர் அலுவலகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Night
Day