பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக காஞ்சிபுரம் சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வழிநெடுகிலும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
 
தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்திருப்பவரும், நம் இயக்கத்தின் உயிர் மூச்சாகவும், தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவராகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு நேரில் சென்று, அங்கு அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பூந்தமல்லி பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அம்பேத்கர் சிலை அருகே கழக நிர்வாகி பூவை கந்தன் ஏற்பாட்டில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொத்துகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என உற்சாகத்துடன் முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் அங்கு கூடி இருந்த பொதுமக்கள், பூந்தமல்லி அண்ணா நகர் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர். அவர்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா முதலமைச்சராகி அம்மாவின் நல்லாட்சியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நரிக்குறவர் இன மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பட்டாசுகள் வெடித்து வரவேற்றதோடு, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். மேலும், நரிக்குறவர் இன மக்கள் பாசிமணி மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.

தொடர்ந்து சுங்குவார்சத்திரத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கொளத்தூர் பெருமாள் ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்தும் பூசணிக்காய் திருஷ்டி கழித்தும் புரட்சித்தாய் சின்னமாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், அண்ணா பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை புரட்சித்தாய் சின்னம்மா மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்ததற்கான வருகை பதிவேட்டில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கையொப்பமிட்டார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பேரறிஞர் அண்ணாவின் வாழ்வியல் பற்றிய புத்தகத்தை, கழக நிர்வாகி எல்லாபுரம் எல்.ரஜினி வழங்கினார்.

இதனை தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, புரட்சித்தாய் சின்னம்மா, கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.






Night
Day