ரத்தன் டாடா மறைவு - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப் புகழ்பெற்ற, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு குறித்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலகப் புகழ்பெற்ற டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான திரு.ரத்தன் டாடா காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வணிக அதிபர்களில் ஒருவரான திரு.ரத்தன் டாடா, தனது தொலைநோக்கு பார்வையால், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் - சிறந்த நற்பண்புகளாலும், சேவை மனப்பான்மையினாலும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் - பத்மவிபூஷண், பத்மபூஷண் ஆகிய, இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ள திரு.ரத்தன் டாடா, நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்று இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்தவர் என, புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய தொழில்துறையின் சிகரத்தை தொட்ட திரு.ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் அங்கத்தினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day