ரெட் அலர்ட் கொடுப்பது ஏன் - பாலச்சந்திரன் விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ரெட் அலர்ட் என்பதால் அனைத்து இடங்களிலும் 20 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்று கருதக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவாகவே இருப்பதாக கூறினார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 280 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் சென்னைக்கு அருகே நாளை காலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

இதனிடையே, ரெட் அலர்ட் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பாலச்சந்திரன், சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ரெட் அலெர்ட் என்றால் அனைத்து இடங்களிலும் 20 சென்டி மீட்டருக்கு மேல் கனமழை பெய்யும் என அர்த்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக பாலச்சந்திரன் கூறினார். கடந்த ஆண்டை விட வடகிழக்குப் பருவமழை இந்த முறை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்றும், மீனவர்கள் வரும் 18ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Night
Day