எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை 'லூப்' சாலையின் இரு புறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில், லுாப் சாலையில் உள்ள மீன் வியாரிபாரிகளுக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன் கடைகள், திறக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 356 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் இன்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக குறிப்பிட்டு, சாலையின் இருபுறமும் மீன் கடைகள் அல்லாமல் மற்ற உணவு பொருட்களை விற்கும் நபர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
இதனால் கடற்கரையில் இருந்து சாந்தோம் செல்ல இந்த சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்தனர்.