5 நாட்களாக மீனவர்கள் நடத்திய போராட்டம் தற்காலிக வாபஸ்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி  வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு போராட்டம் நடத்திய மீனவர்களுடன் பேச்சு நடத்தியது. அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 87 விசைப்படகுகளுக்கான நிவாரண நிதியை உயர்த்தி தருவது குறித்து அரசு விரைவில் அறிவிக்‍க ஒப்புக்‍கொண்டுள்ளது. அதேபோல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் படகுகள் மீதான வழக்கு விசாரணைக்கு வாதாட அரசு சார்பில் வக்கீல் ஒருவரை நியமித்து மீனவர்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்‍கப்பட்டது. 

இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவரின் குடும்பத்துக்கு தமிழக அரசால் நாள் தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 350 ரூபாயில் இருந்து உயர்த்தி வழங்க அரசு தரப்பில் ஒப்புக்‍கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Night
Day