மரியாதையே இல்லை... பதவி ஒரு கேடா..!

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியின் பொறுப்பு முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது பேராசிரியர்கள் ஒருமையில் பேசிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பொறுப்பு முதல்வர் புவனேஸ்வரன் தனக்கு பதவியே வேண்டாம் எனக்கூறி கன்வீனருக்கு பேராசிரியர்களின் வாக்குவாதம் தொடர்பான சிசிடிவி ஆதாரங்களுடன் கடிதம் எழுதிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் காமராசர் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் முதல்வருக்கான காலியிடம் நிரப்பப்படாத நிலையில், பொறுப்பு முதல்வராக சமூக அறிவியல் துறையின் தலைவர் புவனேஸ்வரன் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பொறுப்பு முதல்வர் புவனேஸ்வரன் தன்னை பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சமூகவியல் துறைக்கு பணி மாற்றம் செய்யுமாறு பல்கலைகழக கன்வீனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்துடன் பேராசிரியர்கள் ஒருவரையொருவர் கைநீட்டி ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளையும் அவர் இணைத்து அனுப்பியது பேராசியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்வீனியருக்கு எழுதிய கடிதத்தில், பொறுப்பு முதல்வரான தன்னுடைய தலைமையில், துணைத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது, அப்போது முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளை 5ஆம் தேதி திறப்பது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது சில துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கை 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்ததாகவும், அந்த குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள துறைகளையும் திறக்கலாமா என பி.காம் சி.ஏ துறை தலைவர் ராணி கேள்வி எழுப்பியதாக கூறியிருந்தார்.

அதற்கு ஆங்கிலத்துறை தலைவர் மோகன், பேராசிரியர் ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மற்ற துணைத்தலைவர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தபோது, பேராசிரியர் ராணியை வெளியே போ என கூறியதோடு ஒருமையிலும் பேசியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனால், தான், பேராசிரியர் மோகனை அமைதியாக இருக்கும் படி கூறியதாகவும், நீங்கள் ஒருவரே இந்த கல்லூரியை நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என தான் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இனியும் இந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்ற முடியாது, என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகளும் மோதல்களும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொறுப்பு முதல்வரும் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க கோரி கன்வீனருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day