பேருந்தில் சென்ற பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு - மர்ம கும்பல் வெறிச்செயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்ற பள்ளி மாணவனை பட்டப்பகலில் மர்ம கும்பல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த தங்ககணேஷ் என்பவரின் மகன் தேவந்தேந்திரன். இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் இன்று பேருந்தில் மாணவன் பள்ளிக்கு சென்றபோது கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்தை வழிமறித்து ஏறிய மர்மகும்பல், தேவேந்திரனை இழுத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிடவே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த மாணவனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாணவன் அனுப்பி வைக்கப்பட்டார். 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கபடி விளையாடுவதில் மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, மாணவர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பட்டப்பகலில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவனை சராமரியாக வெட்டிய சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day