எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் தமிழகத்திலிருந்து மட்டும் 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேறியதாக தெரியவந்துள்ளது.
கடந்த 22 ஆம்தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் பயிற்சி எடுத்ததாக தெரியவந்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. மருத்துவ விசா தவிர, சார்க் விசா உள்ளிட்ட பிற விசாக்கள் மூலமாக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்தது. மருத்துவ விசாக்களை பெற்று இந்தியா வந்தவர்களுக்கும் இன்றுடன் காலக்கெடு முடிவடைகிறது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து மட்டும் 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேறியதாக தெரியவந்துள்ளது.