ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

லைகா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக, பைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது. 

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீறியதால், பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனிநீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது

அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், 

தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர். 

மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Night
Day