எழுத்தின் அளவு: அ+ அ- அ
அம்மா... உச்சரிக்கும் உதடுகளில் அன்பு சுரக்கும்... அளவற்ற அறிவாற்றலுடனும், நிகரற்ற நினைவாற்றலுடனும், புவி போற்றும் முதலமைச்சராக தரணி எங்கும் புகழ்பெற்ற அம்மா, இளம் பிராயத்தில் இருந்தே கருணை உள்ளத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் திகழ்ந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக திகழ்ந்த, எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் மக்கள் சக்தி தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது. கோடம்பாக்கத்தில் தொடங்கிய அவரது கலைப்பயணம், கோட்டையில் அவரை கோலோச்ச அழைத்துச் சென்றது.
திரைத்துறை தந்த புகழ், மனிதம் காத்துநின்ற மகத்துவம், ஏழை எளியோர் பால் இயற்கையாய் ஈரம் சுரக்கும் இதயம், அடித்தட்டு மக்களின் மேல் இருந்த ஆழமான அன்பு... இவைதான் புரட்சித் தலைவரை மக்கள் தலைவராக்கியது, அவரை வானளாவ உயர்த்தியது...
தீயசக்திகளிடம் இருந்து தமிழ் மக்களை காத்துநிற்க 1972-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆறே மாதத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்து தனது முதல் வெற்றி முத்திரையை பதித்தது.
இதனைத் தொடர்ந்து, 1977-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டையில் நின்று அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தார் எம்.ஜி.ஆர்...
தீயசக்தி அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றுதான் எம்.ஜி.ஆர். அரசியல் பேரியக்கம் கண்டார். தான் தொடங்கிய இயக்கத்தை, தனக்குப் பின்னர் தொடர்ந்து நடத்தி, மக்களுக்கு தொண்டாற்றவேண்டும் என ஒரு தலைவியை அடையாளம் காட்டினார் எம்.ஜி.ஆர்... அவர்தான் புரட்சித்தலைவி அம்மா.
புரட்சித் தலைவியின் ஆளுமைத் திறனும், கழகத்தை கட்டிக்காக்கும் பேராற்றலும் அ.இ.அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு அவசியம் என்பதை அறிந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தனக்கு பக்கபலமாக, உறுதுணையாக, வலுசேர்க்கும் விதமாக புரட்சித் தலைவியை, அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார்.
புரட்சித் தலைவி அம்மா, சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். கிராமப்புற, நகர்ப்புற மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவு கிடைக்கும் வகையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்திய புரட்சித் தலைவியை எம்.ஜி.ஆர் வெகுவாகப் பாராட்டினார். இதனையடுத்து, 1984-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி, அ.இ.அ.தி.மு.க. சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக புரட்சித் தலைவி அம்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984-ம் ஆண்டின் இறுதியில் 8-வது சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றதற்கு, புரட்சித் தலைவி அம்மாவின் இரவு பகல் பாராத சூறாவளி சுற்றுப் பயணம் காரணமாக அமைந்தது.
1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இயற்கை எய்திய பின்னர், அ.இ.அ.தி.மு.க. அடியோடு அழிந்ததாக எதிர்க்கட்சிகள் எக்காளமிட்டன. அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன், சிலர் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டனர். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், எதிர்ப்போரும் வியக்கும் அறிவடர்த்தியும், எண்ணற்ற மக்களின் பேராதரவும் புரட்சித் தலைவி அம்மாவின் தலைமைக்கு கிரீடம் சூட்டின. தமக்கு எதிரான சதிச் செயல்களை, அறிவாற்றல் மற்றும் செயல்திறன் துணைகொண்டு தவிடுபொடியாக்கினார் புரட்சித் தலைவி அம்மா.
1988-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளராக புரட்சித் தலைவி அம்மா, நிர்வாகிகளாலும், தொண்டர்களாலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவேறாக பிளவுப்பட்டிருந்த கட்சியை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்த புரட்சித் தலைவி அம்மா, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, எம்.ஜி.ஆர் விட்டுச் சென்ற அ.இ.அ.தி.மு.கவின் வேரில் நீரூற்றி இரட்டை இலையை புத்துணர்ச்சி பெறச் செய்தார்.
எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, எண்ணங்களை 100 சதவிகிதம் நிறைவேற்றி, தமிழ் இனத்தின் நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் புரட்சித்தலைவி அம்மா...
அசைக்கவே முடியாமல் மக்களின் மனதில் உறுதிபட நிலை கொண்டிருந்த புரட்சித் தலைவி அம்மாவின் செல்வாக்கை சீரழிக்க நினைத்த மோச மனம் படைத்தவர்களின் சதியினை, அம்மா முறியடித்தார். தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏழை, எளிய மக்களுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் தாயுள்ளத்தோடு தாங்கிக் கொண்டார்.
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, 1991-ம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதலமைச்சராக அம்மா பதவியேற்றார். உன்னதத் திட்டமான தொட்டில் குழந்தை திட்டத்தை, முதன்முறையாக செயல்படுத்தியபோது உலகமே முதலமைச்சர் அம்மாவின் தாயுள்ளத்தை பாராட்டியது.
அம்மாவின் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள்... போராட்டங்களை வென்றெடுத்த காயங்கள்... அதற்கு வெற்றித்திலகமிட்ட மக்களின் நியாயங்கள்... இப்படி எத்தனையோ வினாக்குறிகளை வியப்புக்குறிகளாக மாற்றிய பெருமைக்குரியவர் அம்மா...
முதலமைச்சராக இருந்தபோது, மனிதம் போற்றும் அன்னை தெரசாவை, மக்கள் நலம் போற்றும் மகத்தான தலைவி அம்மா, கவுரவித்தது சரித்திரத்தின் பக்கங்களில் இன்னும் ஈரமான நினைவுகளை இழையோடவிட்டுக்கொண்டிருக்கிறது.
1994-ம் ஆண்டு, செப்டம்பர் 3-ம் தேதி, சென்னைக்கு வருகை தந்த அன்னை, 'பெண்களின் மேம்பாடு என்ற புனிதப் பணிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் அம்மா' என பாராட்டு தெரிவித்தார். பிறந்த உடனேயே, பெற்றோரின் முகவரியை தொலைத்துவிட்ட குழந்தைகளுக்கு, 'தொட்டில் குழந்தை திட்டம்' என்ற மாபெரும் மனிதம் போற்றும் திட்டத்தைத் தொடங்கிய முதலமைச்சர் அம்மாவுக்காக தான் தினமும் பிரார்த்தனை செய்யப்போவதாக அன்னை தெரசா உருக்கமாகத் தெரிவித்தது உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாய் காலம் தோறும் காட்சியளிக்கும்... அம்மாவின் கருணை மனதுக்கு அவை எப்போதும் சாட்சி சொல்லும்...
இரக்கம் நிறைந்த அன்னை தெரசா, அம்மாவின் இல்லம் வந்து, 30 நிமிடங்கள் அளவளாவியது மறக்க முடியாத நிகழ்வாகும்...
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட எத்தனையோ குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றிய, தொட்டில் குழந்தை திட்டம், புரட்சித் தலைவி அம்மாவுக்கு உலகம் முழுவதும், அழியாப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் இத்திட்டத்தை வியந்து பாராட்டினார்கள்.
முதலமைச்சர் அம்மாவுக்கு, பொதுமக்களிடையே அதிகரித்து வந்த செல்வாக்கை கண்டு பொறுக்க முடியாத தீய சக்திகள், 1996-ம் ஆண்டில் தொடங்கி, பல்வேறு புனையப்பட்ட பொய் வழக்குகளை தொடர்ந்தன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி, ஒவ்வொரு வழக்கிலும் வெற்றி வாகை சூடினார் முதலமைச்சர் அம்மா.
2001-ம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற புரட்சித் தலைவி அம்மா, பெண்களின் உன்னதத்தை உலகறிய செய்யும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கமாண்டோ படைகளை உருவாக்கி நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
தமிழக மக்கள் சுகாதாரத்தை சிறப்பாகப் பேணி காக்கவும், இதய நலனைப் பராமரிக்கவும், 'இதயம் காப்போம்' திட்டத்தை 2002ம் ஆண்டு முதல் செயல்படுத்தி, ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களுக்கு பேருதவி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா.
புகழ் வாய்ந்த, பழைய பண்பாட்டுப் பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொக்கிஷங்களாக திகழும் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும் என்பதை தமது தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றிய புரட்சித்தலைவி அம்மா, திருக்கோயில்கள் வாயிலாக இறை அன்பர்களுக்கு அமுது படைக்கும் அரும்பணியை மேற்கொண்டார். திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்களில், 'திருக்கோயில் அன்னதானத் திட்டம்', சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் இத்திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர்.
மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார் அம்மா. மழை இல்லாத காலங்களிலும், கோடை மற்றும் வறட்சிக் காலங்களிலும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, மழைநீர் சேகரிப்பை ஒரு இயக்கமாகவே வளர்த்து, தனது உயரிய நோக்கத்தில் மாபெரும் வெற்றியைக் கண்டார் புரட்சித்தலைவி அம்மா.
மக்கள் நலன் காக்கும் உன்னத திட்டங்கள் மற்றும் புரட்சிகரமான முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி அம்மா படைத்த சாதனைகளை இந்தியாவின் இதர மாநிலங்கள் பாராட்டி, தங்கள் மாநிலங்களிலும் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அம்மாவின் புகழுக்கு பெருமை சேர்த்தன. பல வெளிநாடுகளிலும் அம்மாவின் திட்டங்கள் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. மக்களின் உரிமைகளை நிலைநாட்ட மாண்புமிகு அம்மா மேற்கொண்ட நடவடிக்கைகள், மக்களின் நல்வாழ்வுக்காக அம்மா ஆற்றிய அருந்தொண்டுகள் ஆகியவற்றைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ஐ.நா. சபையின் அங்கமான, உக்ரைனைச் சேர்ந்த, International Human Rights Defence Committee என்னும் சர்வதேச அமைப்பு, 'Golden Star of Honor and Dignity Award' - 'தங்கத் தாரகை' என்ற மிக உயரிய விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. இதற்கான விழா சென்னையில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்றபோது, அந்த சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் நேரில் வந்து புரட்சித் தலைவி அம்மாவுக்கு உயரிய விருதை வழங்கி பாராட்டியது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. 150 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சரான அம்மா, எதிர்க்கட்சி யார் என்பதை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக விளங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில், 12 மேயர் பதவிகள் உட்பட 95 சதவீத இடங்களில் வெற்றி பெற்று, தமிழக மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையாய் விளங்கினார், புரட்சித் தலைவி அம்மா. இடைத்தேர்தல்களில், இமாலய வெற்றி பெற்றதோடு, கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அமோக வெற்றியைப் பெற்றார்.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் ஆதரவோடு அ.இ.அ.தி.மு.க. தனித்து நின்று, 37 இடங்களில் மகத்தான மாபெரும் வெற்றி பெற்றதும், நாடாளுமன்றத்தில் அகில இந்திய அளவில் 3-வது மிகப்பெரிய கட்சியாக அ.இ.அ.தி.மு.க. திகழ்ந்ததும் அம்மாவின் சீர்மிகு திறமையால் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
எந்த ஒரு சமூகம், பெண்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களை உயர்வாக நடத்துகிறதோ, அந்த சமூகம்தான் முன்னேற்றம் அடைந்த, நாகரிகமான சமூகமாகத் திகழும். அந்த வகையில் புரட்சித் தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் பெண்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், பெண்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றியமைத்தது.
மகளிருக்காக அம்மா நடைமுறைப்படுத்திய நலத்திட்டங்களைக் கண்டு, உலகமே வியந்தது. இத்தகைய திட்டங்களை அண்டை மாநிலங்கள் பாடமாக பயின்றன. பெண் சமூகத்திற்கு அம்மா செய்து கொடுத்த நலத்திட்டங்களைப் போல், இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. ஏழை, எளிய, சாமானிய பெண்களின் குடும்ப சூழ்நிலையை நன்றாக உணர்ந்து, அவர்களின் நன்மைக்காக அம்மா செயல்படுத்திய திட்டம்தான் தாலிக்குத் தங்கம் என்ற மகத்தான திட்டம். இத்திட்டத்தின்படி ஏராளமான ஏழைப் பெண்களுக்கு திருமணம் வாய்க்கப்பெற்றது. தங்கள் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு நிகழ்ச்சியைக் காண முடியுமா? என்று ஏங்கித் தவித்த பெண்களுக்கு திருமணம் சிறப்பாக நடந்தேறியது. தாய்வீட்டு சீதனமாக தாலிக்குத் தங்கமும், நிதி உதவியும் தமிழ்நாட்டின் தாயிடமிருந்து கிடைத்தது. பல லட்சம் பெண்கள் இத்திட்டத்தினால் பயன்பெற்றனர்.
பாலூட்டும் தாய்மார்கள் வெளியே செல்லும்போது, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கள் கைக்குழந்தைகளுக்கு பாலூட்ட ஏதுவாக, உரிய பாதுகாப்புடன் கூடிய தனி அறைகள் அமைத்துக் கொடுத்தார் புரட்சித் தலைவி அம்மா.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 வகையான பொருட்களை வழங்கும் 'அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்' திட்டத்தை செயல்படுத்தினார், புரட்சித்தலைவி அம்மா.
கிராமப்புற பெண்களின் வருமானத்தைப் பெருக்கி, பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற கறவை மாடுகளையும், ஆடுகளையும் வழங்கியதோடு, பால் உற்பத்தியை அதிகரித்து வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டார் புரட்சித்தலைவி அம்மா.
பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியது, கிராமப்புற கல்வி வளர்ச்சிக்காக அம்மா செயல்படுத்திய அற்புத திட்டமாகும். பேருந்து மற்றும் இதர வாகன வசதிகள் அதிகம் இல்லாத தொலைதூர கிராமப் பகுதிகளில், ஏழை, எளிய, சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறிப்பாக பெண் பிள்ளைகள் எவ்வித சிரமமும் இன்றி கல்வி கற்க, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் பேருதவியாக அமைந்தது.
இதேபோல, மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவ, மாணவியர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்கும் திட்டம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட, அம்மா குடிநீர் திட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகள் வழங்கும் அம்மா மருந்தக திட்டம்... அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் தரமான, சுகாதாரம் மிக்க காய்கறிகள் வழங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்... இப்படி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் புரட்சித்தலைவி அம்மா.
அனைவருக்கும் தரமான கல்வி, மாணவ, மாணவியர் கற்கும் திறனை மேம்படுத்த அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமனம், ஏழ்மை உள்ளிட்ட காரணங்களால் பிள்ளைகளின் இடை நிற்றலைத் தடுக்க சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம், பள்ளிகளின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கை, தொடக்க கல்வி, நடுநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும் மாணவர் சேர்க்கை விகிதங்களை பன்மடங்கு உயர்த்தும் பணி, புதிய கல்விக் கூடங்கள் அமைத்தல், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல்... இப்படி கல்வி வளர்ச்சிக்காக புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய திட்டங்கள்தான் எத்தனை! எத்தனை!
ஏழை, எளிய மக்களும் தொழிலாளர்களும் வயிறார உணவு உண்பதற்காக, மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் என்ற திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா செயல்படுத்தியபோது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை வியப்போடு உற்றுநோக்கின. பல மாநிலங்களில் இருந்து, அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தமிழகத்திற்கு வந்து, அம்மா உணவகம் திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்து சென்று, தங்கள் மாநிலங்களில் இதேபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஒரு தேசத்தின் வளர்ச்சி, முக்கியமாக எழைகளின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், பசிப் பிணி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், அம்மா கொண்டுவந்த அற்புதத் திட்டம்தான் அம்மா உணவகத் திட்டம். நலிவடைந்த நிலையில் உள்ள குடிசைவாசிகள், ஏழை, எளியோர், தொழிலாளர்கள், கூலிவேலை செய்வோர், ஆட்டோ மற்றும் ரிக்ஷா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களின் பசியைப் போக்கும் வகையில் அம்மாவே நேரடியாக இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக மக்களுக்கு அம்மா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம், அரசு மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் வழங்கும் திட்டம், மருத்துவக் காப்புறுதி திட்டம்... இப்படி புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய மக்கள்நலத் திட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
இல்லத்தரசிகளின் இன்னலைப் போக்க, இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் வழங்கும் திட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது. மாநிலம் முழுவதும் இத்திட்டத்தால் பயனடைந்த குடும்பங்கள் ஏராளம்.
ஒவ்வொரு தேர்தலையும் மனதில் கொண்டு, அரசியல் லாப நோக்கத்துடன் திட்டங்களை அறிவிக்கும் தலைவர்களுக்கு மத்தியில், அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களை சிந்தித்து, திறம்பட செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா. மக்களின் நிகழ்கால நல்வாழ்வு மட்டுமின்றி, எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டவர் அம்மா. அதனால்தான் இந்திய நாட்டின் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, உலக அளவிலான தலைவர்களும் புரட்சித் தலைவி அம்மாவை சந்திப்பதிலும், அவரோடு உரையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன், தனது இந்திய வருகையின்போது, அவர் விரும்பி பார்க்க நினைத்த அரசியல் தலைவர் புரட்சித் தலைவி அம்மா. கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டன், சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவை சந்தித்து உரையாடினார். அம்மாவின் பல்வேறு நலத்திட்டங்களையும், சாதனைகளையும் புகழ்ந்து பாராட்டினார். சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அம்மாவுடன், ஹிலாரி கிளிண்டன் ஆலோசனை நடத்தினார்.
பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான Arnold Schwarzenegger சென்னை வந்தபோது, முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். அம்மாவின் ஆளுமைத் திறமையையும், அறிவாற்றலையும் வெகுவாகப் பாராட்டினார்.
'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' என்ற உயரிய சிந்தனையோடு, அனைத்து மக்களும் வாழ்வில் நலமும் வளமும் பெற ஏதுவாக, நல்லாட்சி நடத்திய புரட்சித் தலைவி அம்மா, சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு ஒன்வொன்றும் 300 சதுர அடி பரப்பளவுடன் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சூரியசக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார். பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்கள், கூலித் தொழிலாளர்கள், ஏழை எளியோர் உள்ளிட்ட அனைவரும் இதனால் மிகுந்த பயன்பெற்று, பாலைவனமாக இருந்த தங்கள் வாழ்வை பசுமை ஆக்கிய புரட்சித் தலைவி அம்மாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இப்படி, புரட்சித் தலைவி அம்மாவின் அனைத்து திட்டங்களுமே எழை, எளிய மற்றும் சாமானிய மக்களின் நல்வாழ்வையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் புரட்சித் தலைவி அம்மா அதிக இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். அம்மாவின் சாதனைத் திட்டங்கள் தொடர்ந்தன.
அனைத்து துறைகளிலும் முதல்நிலை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி, வரலாற்று சாதனை படைத்தார் புரட்சித் தலைவி அம்மா.
எத்தனையோ சோதனைகளைக் கடந்து, அஇஅதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக்காத்த புரட்சித்தலைவி அம்மா, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த பேரியக்கம், தமிழ் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வு வளம்பெறவும் தொடர்ந்து பாடுபடும் என்று, தமிழக சட்டப்பேரவையில் சூளுரைத்தார்.
மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பின்னர், அ.இ.அ.தி.மு.க என்ற எஃக்கு கோட்டை அழிந்தே போய்விடும் என்ற தீய எண்ணத்தால் அகமகிழ்ந்து கொண்டிருந்த அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார் புரட்சித்தாய் சின்னம்மா...
அம்மாவின் அருகிருந்து, கண்ணை இமை காப்பதுபோல், அம்மாவைக் காத்து, அம்மாவுக்கு நேர்ந்த பல்வேறு நெருக்கடிகளில், சோதனைகளில் துணையாய் நின்று, தியாக வேள்வியில் தன்னையே கரைத்துக்கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, கழகத்தை காப்பதற்காக தன் தவவாழ்வை, தியாக வாழ்வை மீண்டும் தொடங்கினார்.
மாண்புமிகு அம்மா விட்டுச் சென்ற இடத்தை தியாகத்தால் நிரப்பினார் புரட்சித்தாய் சின்னம்மா. தனக்கென வாழாமல் அம்மாவுக்காகவே வாழ்ந்த சின்னம்மாவின் தியாக வாழ்வு, கழகத்தை கட்டிக்காப்பதற்காகவும், கழகத் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அஇஅதிமுக என்னும் பேரியக்கத்திற்கு வலுவூட்டுவதற்காகவும் தனது மகத்தான பணியை தொடங்கியுள்ளது.
புரட்சித்தாய் சின்னம்மாவின் சீரிய தலைமையில் கழகம் போர்க்களத்தில் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது... சின்னம்மாவின் ஆணைக்கு ஏற்ப, சிப்பாய்களாய் நிமிர்ந்த நடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும் கம்பீரமாய் அணிவகுத்து காத்திருக்கிறார்கள் கோடானு கோடி கழகத் தொண்டர்கள்.
அம்மாவின் ஆசியுடன் விரைவில் மலரும் பொற்கால ஆட்சி...